Sunday, July 21, 2013

200th Meeting : 14th Oct 2012 : Prof.Ku. Gnanasambandhan

மதுரை வாசகர் வட்டத்தில் ஒரே சிரிப்பு மழை. அலை அலையாய் கருத்து அலைகள் முட்டி மோத - கொட்டிய வானம் போல் ஆங்காங்கே கருத்துரைகள். சிந்திக்க சிந்திக்க சிரிப்பலைகள். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் நகைச்சுவை உரையை நேரடியாகக் கேட்டது இதுதான் முதல் முறை.

சிற்றூருக்குப் பேருந்து ஏறி - சிரிக்கச் சிரிக்கப் பேசி - இறக்கி விடப்பட்ட கதையைக் கேட்ட போது நாமும் பேருந்துப் பயணம் சென்றோம். இரயிலில் ஏறி அக்கம் பக்கம் அமர்ந்திருப்போர் இறுக்கமான முகத்துடன் ஏற இறங்கப் பார்த்த போது , அங்கே இங்கே பேசி கலகலப்பாக்கிய காட்சி நம்மையும் இரயிலில் ஏற்றி விட்டது.

படிச்சோமா ! மறந்தோமா ! என்று விட்ட பாடத்தை எல்லாம் நகைச் சுவையில் கொண்டு வந்து நளினமாக நாவில் நடனமாட விட்டார். சிரித்தது ராமனா - திட்டியது சூர்ப்பனகையா - தன்னை விட நல்லவன் இலக்குவனா - என்று கம்ப ராமாயணக் காட்சியைக் களத்தில் கொண்டு வந்து காலத்தில் கருத்துரைத்தார்.

படிப்பது பாரதமா என்றறியாமலே பாரதக் கதையை பாங்காய் உரைத்து, அர்ச்சுணன் அசந்து நிற்க, ஆயுதமெடுத்துக் கண்ணன் முன்னேற, பிதாமகர் பதைபதைத்து வந்து நினைவூட்டும் சபதத்தை - கருத்தாய் நகைச் சுவையாய் காலத்திற்கேற்ப உரைத்தார்.

மகிழ்வாய்ச் சிந்திக்க - மகிழ்ச்சியாய்ப் பார்க்க - நாமிருக்கும் இடமே மகிழ்வு மன்றமாகும். நல்ல சிந்தனை, நல்ல செயல், நற்கருத்துகள் சூழ்ந்திருக்க்கும் இடங்களில் கருத்தலைகள் ( வைஃப்ரேஷன் ) நம்மையும் மகிழ வைக்கும். மனத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்று விவாகனந்தரையும் புத்தரையும் நம் கண் முன்னே கருத்தாய்க் கொண்டு வந்தார்.

நல்லாருந்தது - ரொம்ப ரொம்ப நல்லாருந்தது - ஆனா எப்படி நல்லாருந்தது அப்படின்னு சொல்லப் போனா - அங்கே தான் அது எவ்வளவு கஷ்டங்கறது நினைவுக்கு வந்தது. அவரும் அதைத்தான் சொன்னார்- நகைச்சுவையாகப் பேசுவதென்பது அவ்வளவு எளிதல்ல - பாடுபட்டு அதை வழக்கத்தில கொண்டு வருவதுலதான் இருக்குன்னு சொன்னார்.

அப்பதான் தெரிஞ்சுது - அவர் எவ்வளவு பெரிய மனிதர் - எத்தகைய சிந்தனைவாதி - எப்படி எல்லாம் பாடுபட்டு படிப்படியாய் தன்னை ஊர் உலகமெல்லாம் அறியும்படி உயர்த்திக் கொண்டிருக்கிறார் என்பது. உண்மையில் இந்த மதுரை மண்ணின் மைந்தரவர் என்பது அவரது நகைச்சுவை உரையால் நன்குணர முடிந்தது.

கேட்ட போது சிரித்து மகிழ்ந்த எனக்கு எழுதும் போது அந்த உணர்வை அப்படியே தர இயலவில்லையே என்று தோன்றுகிறது.

--- Reported by செல்வி ஷங்கர் @ மெய்யம்மை

No comments:

Post a Comment